Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, January 12, 2026

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 'நீட்' ; கட் - ஆப் மேலும் உயர்வு அரசு பள்ளி மாணவர்களே கவனம்

 

இளநிலை மருத்து படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் (என்.டி.ஏ.,) நடத்தப்படுகிறது.


கடந்த ஆண்டு, நன்றாக படித்த மாணவர்கள் கூட இயற்பியல் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கண்ணீருடன் வெளியேறினர். இந்நிலையில், மாணவர்கள் திட்டமிட்டு தயாராகவேண்டும் என கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


பொதுவாக கடினமாக கருதப்படும், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் 75 கேள்விகளை எதிர்கொள்ள, 180 நிமிடங்கள் வழங்கப்படும். 'நீட்' தேர்வை பொறுத்தவரையில், 180 கேள்விகளை 180 நிமிடத்தில் எதிர்கொள்ளவேண்டும். இதனால், படிப்பதை காட்டிலும் அதிக மாதிரி தேர்வுகளை எதிர்கொள்ளவேண்டியது அவசியம்.


இதுகுறித்து, கல்வியாளர் அஸ்வின் கூறியதாவது:


மே மாதம் வழக்கமாக 'நீட்' தேர்வுகள் நடைபெறும். பொதுத்தேர்வுக்கு படிக்கும் போதே 'நீட்' தேர்வை கருத்தில் கொண்டு ஆழமாக புரிந்து படிப்பது அவசியம்.


பெரும்பாலும் மாணவர்கள் உயிரியல், வேதியியல் பாடங்களை எளிதாக எதிர்கொண்டு விடுவார்கள். இயற்பியல் பிரிவு கேள்விகள் கடினமாகத்தான் இருக்கும். ஆழமாக புரிந்து பதில் அளிக்கவேண்டும். ஒரு நிமிடத்தில் ஒரு கேள்வி என்பதால் அதிக பயிற்சி தேவை.


படித்துக்கொண்டே இருக்காமல், படித்ததை 'ரிவைஸ்' செய்ய, அவகாசம் எடுத்துக்கொள்ளவேண்டும். 'ரிவைஸ்' செய்து முடித்தபின் சிறு குறிப்புகள் எடுத்து, கையேடு ஒன்று பராமரிப்பது தேர்வு சமயத்தில் உதவும். அதிகமாக மாதிரி தேர்வுகளை எழுதி நேர மேலாண்மை பழகவேண்டும். கிடைக்கும் நேரங்களை தற்போது சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.


குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீடு என அலட்சியமாக இல்லாமல் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இரண்டாம், மூன்றாம் முறை தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் கட்-ஆப் மதிப்பெண்களும் தொடர்ந்து அதிகரிக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு படிக்கவேண்டும்.


இவ்வாறு, அவர் கூறினார்.


No comments:

Post a Comment

LightBlog