பள்ளிக்கல்வியின் செயல் திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆராய்வதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை: துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை மாதந்தோறும் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டப் பொருள் சார்ந்த விவரங்கள் ஒவ்வொரு மாதமும் 4-வது வார இறுதியில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.
அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படும். அதன்படி, வரும் டிசம்பர் மாதத்துக்கான கல்விசார் அலுவல் ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 5-ம் தேதி காணொலி மூலமாக நடைபெறும்.
இதற்கான கூட்டப் பொருள், அதாவது பள்ளி ஆண்டாய்வு, பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு, திறன் திட்டம், குறைந்த செயல்திறன் கொண்ட பள்ளிகள் ஆகியவை குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து துரிதமாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தொடக்கக்கல்வித் துறை சார்பிலும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடப்பு டிசம்பர் மாதம் பிரத்யேகமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடும் நடைபெறுகிறது.

No comments:
Post a Comment