தமிழகத்தில் பழைய ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம், ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என மூன்று விதமான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் குழு ஒன்றை அமைத்தது.
இக்குழு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி குழு தனது இடைக் கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ககன்தீப் சிங் பேடி குழுவின் இடைக்கால அறிக்கை பரிந்துரைகள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:
Post a Comment