மின் மீட்டரை போட்டோ எடுத்து அனுப்பினால் மே மாத மின் கட்டணம் தெரிவிக்கப்படும்: மின்வாரியம் தகவல் - Asiriyar.Net

Friday, May 21, 2021

மின் மீட்டரை போட்டோ எடுத்து அனுப்பினால் மே மாத மின் கட்டணம் தெரிவிக்கப்படும்: மின்வாரியம் தகவல்

 







தமிழக மின்வாரிய வருவாய்ப் பிரிவின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர், அனைத்துக் கண்காணிப்புப் பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 


கொரோனா முழு பொது முடக்கத்தால் மின்  நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமுடக்கம் அமலில் உள்ள கால கட்டத்தில் (மே 10 முதல் 24ம் தேதி வரை) மின் கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் கடந்த  மாத கணக்கீடு (மார்ச் 2021) அல்லது 2019ம் ஆண்டு, மே மாதத்துக்கான கட்டணத்தைச் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.



ஆனால் முந்தைய மாத மின் கட்டணமானது, தற்போதுள்ள மின் கட்டணத்தை விட அதிகமாக  இருப்பதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.


 இதைக் கருத்தில் கொண்டு, நுகர்வோரின் சுய கணக்கீட்டை வாரிய பதிவேட்டில் பதிவு செய்து, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட கடந்த மாத பதிவுகளை நீக்க வேண்டும் என  அறிவுறுத்தப்படுகின்றன.



மேலும், சுய கணக்கீடு செய்வது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மின் பகிர்மானக் கழகத்தின் கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்: தாழ்வழுத்த மின் நுகர்வோரின் மீட்டர் பெட்டிகளை புகைப்படம் எடுத்து, கட்செவி அஞ்சல், மின்னஞ்சல் போன்றவை வாயிலாக சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



நுகர்வோர் அனுப்ப வேண்டிய பிரிவு அதிகாரியின் வாஸ்அப் அஞ்சல் எண் உள்ளிட்ட விவரம், மின்வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்பட்ட தகவலின் அடிப்படையில், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட முந்தைய மாத கட்டணம் நீக்கப்பட்டு, புதிய கட்டணம் பதிவேற்றம் செய்யப்படும். இது தொடர்பான தகவல்களும், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், கட்செவி அஞ்சல்  வாயிலாக நுகர்வோருக்குத் தெரிவிக்கப்படும். இதன் அடிப்படையில் இணையதளம் வாயிலாகவே மின் கட்டணம் செலுத்த வேண்டும் என நுகர்வோரை அறிவுறுத்த வேண்டும். மேலும், தேவைப்படும் பட்சத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ஊழியர்கள் மின் கணக்கீடு  செய்யலாம்.


No comments:

Post a Comment

Post Top Ad