பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தலைவர் ரத்தினசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு வேலைக்கான திறனை, குழந்தை பருவத்தின் தொடக்கத்திலேயே ஒரு மாணவர் பயில வேண்டும். எட்டாம் வகுப்பு முடிக்கும் போதே பத்து பள்ளி வேலை நாட்கள், உள்ளூரில் அத்தகைய வேலை நடக்கும் இடத்திற்கே சென்று 13 வயதிற்கு உட்பட்ட குழந்தை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தேசியக் கல்விக் கொள்கை கூறுகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மக்களாட்சி மாண்பிற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராக, மாநில அரசின் உரிமைகள் அனைத்தையும் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ள வழி செய்யும் தேசியக் கல்விக் கொள்கை விளைவிக்க இருக்கும் பாதிப்புகளில் இருந்து தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும்.
சமமானக் கற்றல் வாய்ப்பு அனைவருக்கும் உறுதிப்படுத்த நமது செயல்பாடு அமைய வேண்டும். நோய்த் தொற்று மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. இத்தகைய சூழலில், இயக்குநர் பொறுப்பு, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை சுற்றியே நமது விவாதம் அமைவது சிக்கல்களை தீர்க்க உதவாது.
இயக்குநர் பணி ஆணையர் பணியாக உருமாற்றம் பெற்றுள்ளதாக தனியாக எந்த அரசாணையும் வெளியிடப் படவில்லை. எனவே, இது தற்காலிக ஏற்பாடு என்பதை நன்கு உணர முடிகிறது.
பள்ளிக் கல்வி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளவர் மாணவர்களை நேசிக்கக் கூடியவர். ஆசிரியர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர். அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் பயின்று தமிழ் வழியில் ஆட்சிப் பணிக்கான தேர்வு எழுதி தேர்ந்தேடுக்கப்பட்டவர்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு பேரிடர் காலப் பணிகளைச் சிறப்பாகச் செய்யட்டும். பேரிடர் காலம் முடிந்த பிறகு அரசிடம் பேசலாம். பழைய நிலைக்குப் பள்ளிக் கல்வி அமைப்பு திரும்ப வேண்டிய அவசியத்தை உணர்த்தலாம்.
தன் மகன் கலந்துகொள்ளும் விழாவையே ரத்து செய்ய உத்தரவிட்டு மேற்கொண்ட நடவடிக்கை, முதல்வர் மக்களாட்சி மாண்புகளைப் போற்றக் கூடியவர் என்பதற்கு நல்ல சான்று. இயல்பு நிலை திரும்பியதும் முதல்வர் நிச்சயம் ஆசிரியர் இயக்கங்களை அழைத்துப் பேசி அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய முடிவை எடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
அதுவரை பொறுமை காத்து, பள்ளிக் கல்வித் துறையில் உடனடியாக நடக்க வேண்டிய பணிகள் எந்தச் சுணக்கமுமின்றி நடைபெற பொறுப்பேற்றுள்ள பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனைத்துத் தரப்பினரும் முழு ஆதரவு தர வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment