TAPS ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து வழக்கு - பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - Asiriyar.Net

Wednesday, March 4, 2026

TAPS ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து வழக்கு - பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு






தமிழ்நாடு அரசு ஊழியர்களின் இரண்டு தசாப்த கால போராட்டத்திற்கு ஒரு தீர்வாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை" கடந்த 03-01-2026 அன்று அறிவித்தார். 


செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த புதிய திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்குப் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது வாங்கும் கடைசி மாத ஊதியத்தில் சரியாக 50% தொகை ஓய்வூதியமாக உறுதியளிக்கப்படும்.

ஊழியர்களின் 10% பங்களிப்பு போக, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்.

பணியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, ஓய்வூதியதாரர்களுக்கும் ஆண்டுக்கு இரண்டு முறை (6 மாதங்களுக்கு ஒருமுறை) அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

ஓய்வூதியதாரர் மறைந்தால், அவர் பெற்று வந்த தொகையில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

பணியின் போது உயிரிழக்க நேரிட்டால், பணிக்காலத்தின் அடிப்படையில் 25 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடை வழங்கப்படும்.

தகுதிப் பணிக்காலம் முழுமை பெறாதவர்களுக்கும், ஏற்கனவே சி.பி.எஸ் (CPS) திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எதிர்ப்புக் குரல்: "இது ஓய்வூதியமே இல்லை!"

அரசு இந்தத் திட்டத்தை ஒரு மைல்கல்லாகக் கருதினாலும், ஜாக்டோ ஜியா உள்ளிட்ட ஊழியர் அமைப்புகள் இதனை கடுமையாகச் சாடியுள்ளன. 

"உண்மையான ஓய்வூதியம் என்பது ஊழியர்களிடம் எதையும் பிடித்தம் செய்யாமல் அரசே வழங்குவதுதான். ஆனால், இந்தத் திட்டத்தில் எங்கள் பணத்தைப் பிடுங்கி அரசே வைத்துக்கொண்டு, அதன் மூலம் வரும் வட்டியை மட்டும் 'ஓய்வூதியம்' என்ற பெயரில் தருவது ஒரு மோசமான அணுகுமுறை," என்று ஜாக்டோ ஜியா அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) கிடைக்கும் மொத்தத் தொகை கூட இந்த புதிய முறையில் கிடைக்காது என்பது இவர்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவு

இந்தத் திட்டம் தொடர்பாகத் தற்போது சட்டப் போராட்டமும் தொடங்கியுள்ளது. புதிய திட்டம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு (டிசம்பர் 2025) விருப்ப ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ரேணுகாதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அமல்படுத்தப்படும் தேதியால் தங்களைப் போன்றவர்கள் பாதிக்கப்படுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து 3 வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad