கணினி ஆசிரியர்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க முடிவு! - Asiriyar.Net

Tuesday, March 10, 2026

கணினி ஆசிரியர்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க முடிவு!

 

அரசு பள்ளியில் பணி நியமனம் செய்யக் கோரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க 70 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவிலேயே, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்தான் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் இல்லாமல் உள்ளது.

மத்திய அரசின் சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களும் கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாகவும், தனிப் பாடமாகவும் கற்றுத் தரும் நிலையில், தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளியில் கொண்டு வராமல் உள்ளது.

ஆனால், மத்திய அரசு, கணினி ஆசிரியர்களுக்கு வழங்கும் நிதியை மடைமாற்றம் செய்து, அதை எமிஸ் ஆபரேட்டர்களுக்கு பயன்படுத்து கின்றனர். இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கற்றுத் தர ஆசிரியர்களும் இல்லை, பாடங்களும் இல்லை.

மாணவர்கள் 5 பாடங்களை மட்டும் கற்று வருகின்றனர். எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநில துணைத் தலைவர் அ.ஆரோக்கியசாமி கூறியது: தமிழக அரசு, மத்திய அரசு வழங்கிய நிதியை மடைமாற்றம் செய்து கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு கணினி ஆய்வகங்களை நிர்வகிக்கும் ஒப்பந்தம் வழங்கி உள்ளது.

அதுமட்டுமல்லாமல், கணினி ஆசிரியர்களை நியமிக்க வந்த நிதியில், அந்தப் பணிக்கு கல்வித் தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்து அலுவலகப் பணிக்கு மாற்றிக்கொண்டுள்ளனர்.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பலமுறை முறையிட்டும் உரிய பதில் இல்லை.

இதன்மூலம், 70 ஆயிரம் கணினி ஆசிரியர் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டனர். எனவே, தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் தகுதியான கணினி ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்ய வேண்டும்.

மத்திய அரசு வழங்கும் நிதியை கணினி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 70 ஆயிரம் கணினி ஆசிரியர் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad