மாணவர்களை வேலை வாங்கிய சம்பவத்தில் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் - Asiriyar.Net

Saturday, March 14, 2026

மாணவர்களை வேலை வாங்கிய சம்பவத்தில் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்





விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை ஆசிரியை ஒருவர் தனது சொந்த பேன்சி கடையில் வேலை வாங்கிய சம்பவத்தில் ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் எடுத்த அதிரடி

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி, ஜெகஜீவன்ராம் தெருவில் அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், படிக்கும் மாணவ மாணவியரை சுழற்சி முறையில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைப்பது, பள்ளியில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது என பல்வேறு வேலைகளை ஆசிரியை லட்சுமி என்பவர் செய்ய வைத்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, பள்ளியின் அருகே உள்ள தனது சொந்த பேன்சி கடையை மாணவர்களை கொண்டு சுத்தம் செய்ய வைத்ததுடன், அந்த கடையில் உள்ள தின்பண்டங்களை மாணவர்கள் மூலமாகவே பள்ளியில் வைத்து விற்பனை செய்து வருவாய் ஈட்டி வந்துள்ளார். இந்த நிகழ்வுகள் குறித்து அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின.


இச்சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள், காவல் துறையினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகாபுத்ரா உத்தரவிட்டார். அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியை லட்சுமி விதிகளைமீறி மாணவர்களை பயன்படுத்தியது உறுதியானது.

இதையடுத்து பள்ளியில் கற்றல் கற்பித்தல் பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டதால், இடைநிலை ஆசிரியர் லட்சுமி மீது கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, காரியாபட்டி செட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு அவரை பணியிட மாற்றம் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad