பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.500 அபராதம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Asiriyar.Net

Saturday, July 22, 2023

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.500 அபராதம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 



இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென்ற உத்தரவை, மறு ஆய்வு செய்யக் கோரி 6 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்தொடர்ந்த பள்ளிக் கல்வி துறைக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


நாகை மாவட்டம், ஆயக்காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட வெண்ணிலாவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக 8 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்பின்னரும் ஓப்புதல் அளிக்காததால், மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக மூன்று முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், 2016-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி கல்வித்துறை செயலாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 


இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், 2016ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று 2 ஆயிரத்து 148 நாட்கள் காலதாமதத்துடன் கல்வித்துறை மனுத் தாக்கல் செய்திருப்பதை ஏற்க முடியாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, இத்தொகையை ஒரு வாரத்தில் சட்டப்பணி ஆணைக்குழுவிடம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.


Post Top Ad