சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் 30ம் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் ப்ரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர். பள்ளியின் 30ம் ஆண்டு கல்வெட்டை திறந்து வைத்து, அதைத் தொடர்ந்து ஆசிரியர், மாணவர்கள் என சிறப்பாக செயல்பட்ட 18 பேருக்கு நினைவுப்பரிசினை முதல்வர் வழங்ககினார்.
இப்பள்ளி அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக்கலைஞர்களின் குழந்தைகள் மேம்பாட்டிற்கான 5 லட்சம் ரூபாய் காசோலையை பத்திரிகை புகைப்பட கலைஞர் சங்கத்திடம் வழங்கினார். பின்னர் மாணவர்களிடையே முதல்வர் பேசியதாவது:
இந்தியாவிலே தமிழ்நாடு முதலிடம் என்ற பெயர் வர வேண்டும் என உழைத்து கொண்டு இருக்கிறோம். வாழ்க்கை என்பது பள்ளிக்கூடம், அதிலும் அனைவரும் மாணவர்கள் தான், எனவே நானும் மாணவன் தான். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் திராவிட பள்ளியில் பயின்ற, பயிலக்கூடிய மாணவன் நான். 30 வருடமாக பெண் ஆசிரியர்களை கொண்டு மட்டுமே இந்த பள்ளி இயங்கி கொண்டு வருவது பாராட்டுக்குரியது. அனைத்து பள்ளிகளிலும் சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டும். அத்தகைய ஆட்சிதான், நான் அடிக்கடி சொல்லும் திராவிட மாடல் ஆட்சி.
மாணவர்கள் ஜாதி, மத பேதமின்றி, வெறுப்பு உணர்வின்றி போற்றும் நட்பை பள்ளி பருவத்துடன் மட்டும் இல்லாமல், வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தால் தான், நமக்கும், நாட்டுக்கும் நல்லது. உங்களின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் அடித்தளமிடுவது பள்ளி பருவம் தான். பள்ளிகளில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்களின் இன்னொரு பெற்றோராக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment