தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 3-ம் தேதி முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தினமும் வகுப்பு நடத்துவது குறித்து ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கு கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவிவரும் சூழலில் பள்ளிகளில் தினமும் வகுப்பு நடத்தும் முடிவு தள்ளிப்போக வாய்ப்புள்ளதா என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் அளித்த பதில்:
''தமிழகத்தில் கரோனா ஊரடங்கு நீட்டிப்பு பற்றி 4 நாட்களுக்கு முன்பு முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது பள்ளிக் கல்வித்துறை பற்றியும் பேசப்பட்டது. இப்போதைக்கு எந்த பாதிப்புமில்லை. இதனால் சுழற்சி முறையின்றி வழக்கம்போல முழுவதுமாக ஜனவரி 3-ம் தேதிக்குத் திறக்கலாம் எனப் பேசப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் ஒமைக்கரான் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதும் அவரிடம் பேசினேன். அவர் 25-ம் தேதி மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதில் இதுகுறித்து முதல்வருடன் கலந்து பேசுவோம் என்றார். எனவே 25-ம் தேதிக்குப் பிறகு 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தினமும் வகுப்பு நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது''.
இவ்வாறு அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
No comments:
Post a Comment