ரூ.250 கோடியில் பள்ளி கட்டிட பராமரிப்பு பணி - கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் - Asiriyar.Net

Sunday, December 19, 2021

ரூ.250 கோடியில் பள்ளி கட்டிட பராமரிப்பு பணி - கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்

 





தமிழக பள்ளிகல்வித் துறை ஆணையரகம் வெளியிட்ட சுற்றறிக்கை: பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் இணை இயக்குநர் நிலையிலான அலுவலர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு பணி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு பள்ளி திறப்பதை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகளை மேற்பார்வை செய்தனர். அப்பணிகளின் போது இடித்து அகற்றப்பட வேண்டிய கட்டடங்கள், பராமரிப்பு தேவைப்படும் கட்டடங்கள், புதியதாகத் தேவைப்படும் கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டு கடந்த இரு மாதங்களாக தகுதியற்ற நிலையிலுள்ள கட்டடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் படிப்படியாக இடிக்கப்பட்டு வருகின்றது.


பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் வாயிலாக ரூ.250 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க ஏதுவாக ஊரக வளர்ச்சி, வருவாய், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கொண்ட குழுவினை அமைத்து மாவட்ட ஆட்சியர்கள் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


இந்த குழுவினர் ஆபத்தான கட்டடங்களை இடிப்பதால் வகுப்புகளை நடத்த கூடுதலாகத் தேவைப்படும் இடவசதிக்கென பள்ளி வளாகங்களுக்கு அருகில் உள்ள பிற பள்ளிகளுக்கோ தேவைப்படும் வாடகைக்கோ தக்க இடங்களை ஏற்பாடு செய்து மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் எவ்வித தடையுமின்றி நடைபெற ஆவன செய்ய வேண்டும். மேலும் இந்த பணிகளை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உதவ பள்ளிக்கல்வி துறை இணை இயக்குநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment

Post Top Ad