பொதுத்தேர்வு பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை - அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம் - Asiriyar.Net

Monday, November 16, 2020

பொதுத்தேர்வு பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை - அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்

 






10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கமளித்துள்ளது.



 


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் ( 2019-2020 ) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வும் ரத்து செய்யப்பட்டது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது.


 



இதனிடையே, நடப்பு கல்வியாண்டில் ( 2020-2021 ) 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜூனில் நடத்த முடிவு செய்து, அதற்கான அட்டவணையை, தேர்வுத்துறை அரசிடம் சமர்ப்பித்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுத்துள்ளது.


 


இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம், நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், பள்ளிகள் திறக்கப்பட்டவுடன்தான் அது தொடர்பாக ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad