மதிப்பு எப்போது வரும்?
ஒரு நாள் கணித ஆசிரியர் பூஜ்யம் முதல் ஒன்பது வரையிலான எண்களைக் கலந்துரையாடலுக்கு அழைத்தார்.
நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.
பூஜ்யம் ஒளிந்து கொண்டது.
இதைக் கண்ட மற்ற எண்கள் பூஜ்யம் ஒளிந்து கொண்டதைப் பற்றி ஆசிரியரிடம் புகார் தெரிவித்தன.
ஆசிரியர், “பூஜ்யமே, நீ மட்டும் கலந்துரையாடலுக்கு வராமல் ஏன் ஒளிந்து கொண்டாய்?” என்று கேட்டார்.
“ஐயா, நான் வெறும் பூஜ்யம்தானே. என்னைப் பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்குத்தான் எந்த மதிப்பும் இல்லையே...” என்று வருத்தமாக கூறியது.
இதைக் கேட்ட ஆசிரியர், “ஒன்று” என்ற எண்ணை முன்னே வரச் சொன்னார்.
குழுவினரைப் பார்த்து, “இதன் மதிப்பு என்ன?” என்றார்.
“ஒன்று!” என்றன மற்ற எண்கள்.
அடுத்து பூஜ்யத்தை அதன் அருகில் நிற்கச் சொன்னார்.
“இப்போது இதன் மதிப்பு?”
“பத்து!” என்று மற்ற எண்கள் உரக்கக் கத்தின.
அடுத்து பூஜ்யத்தைப் பார்த்து, “பூஜ்யமே, இப்போது தெரிந்து கொண்டாயா உன் மதிப்பு? “ஒன்று” என்கிற எண் உன் சேர்க்கையால் பன்மடங்கு அதிக மதிப்பு அடைந்ததைப் பார்த்தாயா?” என்றார்.
எல்லா எண்களும் மகிழ்ச்சியுடன் கை தட்டின.
“ஆமாம்... நான் சரியான இடத்தில் இருந்தால், நானும் பயனுடையவன்தான். நான் மற்றவருடன் சேர்ந்தால் நாங்கள் அனைவருமே அதிக மதிப்பு வாய்ந்தவர்களாகிறோம்” என்று பூஜ்யம் மகிழ்ச்சியுடன் சொன்னது.
உடனே கணித ஆசிரியர், “ஆமாம், இதுபோல்தாம் மாணவர் ஒவ்வொருவரிடமும், ஏதாவது ஒரு திறமை இருக்கும். அதைச் சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்தினால் நாமும் நம்முடைய மதிப்பை உயர்த்திக் கொள்ள முடியும்” என்றார்.