வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை, ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. வருமான வரிச்சட்டம் பிரிவு 139ன் படி, 2019-20 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை, 2020 மார்ச் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, இதற்கான அவகாசம் முதலில் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர், ஜூலை 31, செப்டம்பர் 30, நவம்பர் 30ம் தேதி, அதன் பிறகு டிசம்பர் 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டது.
இந்த அவகாசம் நாளையுடன் முடிந்த நிலையில், 6-வது முறையாக அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதில், ‘கொரோனா பரவலால் வருமான வரி செலுத்துவோர் எதிர் கொண்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 2019-20 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிப்புச் செய்யப்படுகிறது,’ என தெரிவித்துள்ளது.