"வெடிக்கப் போவது பட்டாசா அல்லது போராட்டமா"? - காத்திருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் - Asiriyar.Net

Friday, January 2, 2026

"வெடிக்கப் போவது பட்டாசா அல்லது போராட்டமா"? - காத்திருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்

 



பழைய ஓய்வூதியம் அமுல்படுத்துவது குறித்த அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நாளை ஜனவரி மூன்றாவது நாள் அறிவிப்பார் என்று ஜாக்டோ ஜியோ மற்றும் பிற அமைப்புகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் அமைச்சர்கள் ஏவா வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தெரிவித்துள்ளனர் 


பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ம் தேதி முதல் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து இருந்தது


இதன் தொடர்ச்சியாக அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று  வந்தது 


மேலும் தமிழக அரசு தரப்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான திரு ககன்சிங் பேடி அவர்கள் தலைமையில் குழு ஒன்று அமைத்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்த ஆய்வுகளை செய்து அறிக்கையை பெற்றது


தற்போது இன்று ஜனவரி இரண்டாம் தேதி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அழைத்த அமைச்சர்கள் இன்னும் 24 மணி நேரம் பொறுத்துக் கொள்ளும் படியும் நாளை அதாவது ஜனவரி 3 அன்று ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்த முக்கியமான அறிவிப்பு ஒன்றினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க உள்ளார் என்று கூறியுள்ளனர்


தமிழக அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக மகிழ்ச்சியான கொண்டாட்ட செய்தி வரப்போகிறதா அல்லது தொடர்  வீரியமான போராட்டத்திற்கு வழிவகை செய்யப் போகிறதா என்று தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் முதல்வர் அறிவிப்பினை எதிர்நோக்கி உள்ளனர்


அரசியல் அழுத்தம்



தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என்று தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்தது


அதனைத் தொடர்ந்து பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் திமுக கட்சிக்கு வாக்களித்ததாக அப்போது கூறப்பட்டது


எடுத்துக்காட்டாக பல தொகுதிகளில் பெரும்பாலான தபால் ஓட்டுக்கள்  திமுக கட்சிக்கு ஆதரவாக விழுந்தன


மேலும் அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரை திமுக கட்சிக்கு வாக்களிக்க அறிவுறுத்தியதாக அப்போது பேசப்பட்டது


தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலும் வந்துவிட்டது 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பெரும் அரசியல் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது


 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நம்பிக்கையை பெற திமுக அரசு நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது


இருப்பினும் பழைய ஓய்வுதிய திட்டத்தில் முழுமையாக செயல்படுத்த முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் சில மாற்றங்கள் செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்துவது சாத்தியம் என்று அரசு கருதுகிறது


23 ஆண்டுகளுக்கு முன்பு பழைய ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டபோது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அப்போது நடைபெற்ற அதிமுக ஆட்சி எதிர்த்து கடுமையான போராட்டத்தினை செய்தனர் 



மேலும் எஸ்மா டெஸ்மா போன்ற பல்வேறு சட்டத்தின் விளைவுகளையும் அனுபவித்தனர். அவ்வாறான கடுமையான போராட்டத்திற்கு தற்போது அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்கள் தயாராகி வருகிறதா என்ற கேள்வியும் ஆட்சியாளர்களிடம்  பிற அரசியல் கட்சிகளிடம்  உள்ளது



எதுவாயினும் 23 ஆண்டுகள் பொருத்த அரசு ஊழியர்கள் இன்னும் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.


மேலும் பழைய ஓய்வு ஊதியம் குறித்து பிற அரசியல் கட்சிகள்  எந்த வாக்குறுதியும் இது வரை அளிக்கவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது


"வெடிக்கப் போவது பட்டாசா அல்லது போராட்டமா" என்று நாளை முதல்வர் அவர்களின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 




No comments:

Post a Comment

Post Top Ad