அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள், டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: 1 முதல் 5-ம் வகுப்பு வரையான வினாத்தாள்களை எமிஸ் தளத்தில் டிச.3-ம் தேதி வரை மாவட்டக் கல்வி அலுவலர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின்னர் பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏ ற்ப அவற்றை பிரதி எடுக்க வேண்டும்.
தொடர்ந்து வினாத்தாள்களை வகுப்பு, பாடம், பயிற்று மொழி வாரியாக பிரித்து, உறையிட்ட கவரில் வைத்து தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாளை எடுத்து பயன்படுத்த வேண்டும். இதேபோல், 6 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
தேர்வு நடை பெறும் நாளுக்கு முந்தைய தினம் காலை 9 மணியில் இருந்து பள்ளிகள் நேரடியாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment