நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட கடசோலை பகுதியில் ஊராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 25 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடசோலை, ஆல்காடு பகுதிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி வனத்தை ஒட்டி அமைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கரடி நடமாட்டம் இருந்து வருகிறது.
விடுமுறை நாளான நேற்று முன்தினம் பள்ளி மூடப்பட்டிருந்தது. நள்ளிரவில் பள்ளி வளாகத்தில் நுழைந்த கரடி, அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கு ஏதேனும் உணவு இருக்கிறதா? என தேடியுள்ளது. அங்குள்ள பீரோவை உடைத்து உள்ளே இருந்த பதிவேடுகள், கோப்புகளை வெளியில் இழுத்து போட்டு சேதப்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்தபோது பள்ளி கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சுற்றுப்புறங்களில் கரடி நடமாடியதற்கான தடங்கள் இருந்தன. தகவலறிந்து ஒன்றிய கவுன்சிலர் சந்தோஷ், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கரடி நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment