பள்ளிக்கல்வி ஆணையர் அடுத்த உத்தரவு வரும் வரை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, July 13, 2021

பள்ளிக்கல்வி ஆணையர் அடுத்த உத்தரவு வரும் வரை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்!

 




தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாட புத்தகங்களை வழங்குவது உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் என்ற ஜாக்டோ அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.


ஆசிரியர் வருகை

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து புதிய மாணவர் சேர்க்கை மற்றும் மதிப்பீடுகள் உள்ளிட்ட சில நிர்வாகப் பணிகளுக்காக பள்ளிகளை மீண்டுமாக திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக செயல்பட்டு வந்த பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக மூடப்பட்டது. இதற்கிடையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது.


இதை தொடர்ந்து அடுத்த 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை, பாட புத்தகங்களை வழங்குவது, பள்ளிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் பணிகளுக்காக அனைத்து பள்ளிகளும் மீண்டுமாக திறக்கப்பட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவின் படி, 100% ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.


மேலும், தினமும் வேலைக்கு வர, சங்க நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், ஜூன் 1 முதல், புதிய கல்வி ஆண்டு பணிகள் துவங்கின.அப்போது, கொரோனா ஊரடங்கு முழுமையாக அமலில் இருந்ததால், ஆசிரியர்கள் தினமும் சுழற்சி முறையில் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டார்.


சுற்றறிக்கை


தற்போது, ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால், பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கல்வி பணிகளும் தீவிரமாகியுள்ளன. எனவே, தினமும் கல்வி பணிகளை மேற்கொள்ளவும், அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளியில் இருந்தவாறு, 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்த வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.


சி.இ.ஓ.,க்கள் மீது புகார்


இந்த சுற்றறிக்கைக்கு, ஜாக்டோ - ஜியோவில் உள்ள ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.'கொரோனா தொற்று காரணமாக, ஆசிரியர்களின் உடல் நலன் பாதுகாப்பு கருதி, தினமும் பள்ளிக்கு வேலைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், ஆசிரியர்களை தினசரி வேலைக்கு வர உத்தரவிட்ட கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மீது, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமாரிடமும், அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடமும் புகார் அளித்துள்ளனர்.


இதை தொடர்ந்து இந்த உத்தரவை ஆணையர் அவர்களின் உத்தரவின் கீழ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஜாக்டோ நிர்வாக அதிகாரிகள், அம்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு, பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு செல்லலாம் என இன்று (ஜூலை 9) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Post Top Ad