பணி மாறுதலாகி சென்ற ஆசிரியரின் காலை பிடித்து மாணவ மாணவியர் கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன் விவரம் வருமாறு: தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள(எம்) பொலுமல்லா ஜில்லா பரிஷத் அரசுப்பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சைதலு. இவர் தன்னிடம் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் அதிக அன்பும், அக்கறையும் காட்டி வழிநடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வேறு பள்ளிக்கு அவருக்கு பணி மாறுதல் கிடைத்தது. இதையடுத்து ஆசிரியர் சைதலு, நேற்று மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்து வாழ்த்து தெரிவித்து விடைபெற முயன்றார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவ, மாணவிகள் ஆசிரியரின் காலில் விழுந்து, `சார், இதேபள்ளியில் பணிபுரியுங்கள், எங்கும் போகவேண்டாம் ப்ளீஸ் சார்…’ என கதறி அழுதனர். ஒரு கட்டத்தில் மாணவர்கள் ஆசிரியரை போகவிடாமல் அரண்போல் நின்றுகொண்டனர். இதைக்கண்ட அந்த ஆசிரியரும் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.
பின்னர் ஒருவழியாக அவர்களை சமாளித்து தனது பைக்கை எடுக்க முயன்றார். ஆனால் பைக்கையும் மறித்து மாணவர்கள் கெஞ்சினர். இதன்பின்னர் அந்த ஆசிரியர் பேசுகையில், `ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பல குருக்கள் வருவார்கள். அவர்கள் சொல்லிதரும் பாடத்தை கவனித்து உயர் இலக்கை அடைய வேண்டும். என்னைவிட இன்னும் சிறப்பான ஆசிரியர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். எனவே என்னை போகவிடுங்கள், யாரும் அழவேண்டாம்’ என அறிவுரை கூறினார்.
No comments:
Post a Comment