தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்பது உத்தரவாக உள்ளது. அதேநேரம், ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களை சில ஆசிரியர்கள் பயமுறுத்தி சரிசெய்யும் நோக்கில் அடிக்கவும் செய்கிறார்கள். அப்படி அடிக்கும் ஆசிரியர்கள், சில நேரங்களில் வரம்பு மீறி நடந்து கொள்வது விபரீதத்தில் முடிகிறது. அந்த வகையில், சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் விபரீதமாக மாறி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் தமிழில் பேசிய 5ம் வகுப்பு மாணவனை, ஆசிரியை சரமாரி தாக்கி, அவனது காதை பிடித்துத் திருக்கியதாக கூறப்படுகிறது. இதில், காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான் மாணவன். அவனை மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், பள்ளிக்கு சென்று ஆசிரியையை தாக்க முயன்றுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த ராயபுரம் போலீசார், சம்பவம் குறித்து விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் மாணவனின் காதை பிடித்து திருகி காயப்படுத்திய ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஆசிரியையிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். தமிழில் பேசியதால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை காதை பிடித்து திருகி மாணவனை படுகாயப்படுத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment