அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிப்பதற்கு தடை - விதிமுறைகள் தமிழக அரசு வகுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - Asiriyar.Net

Tuesday, March 15, 2022

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிப்பதற்கு தடை - விதிமுறைகள் தமிழக அரசு வகுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

 




"அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்"- மதுரை உயர் நீதிமன்ற கிளை


தமிழகத்தில் பல அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் பணிநேரங்களின்போது தேவையில்லாமல் செல்போன் பயன்படுத்துவது, அதனால் வைரலாகும் வீடியோக்கள் என அவ்வப்போது சில சம்பவங்கள் ஆங்காங்கே பரவலாக நடந்தவண்ணம் உள்ளது. இதுபோன்ற சம்பவத்தால் பல நாள்களுக்கு முன்பு, பணிநேரத்தின்போது உடன் பணிபுரியும் ஊழியரை வீடியோ எடுத்தது தொடர்பாக திருச்சி சுகாதார மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் ராதிகா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து தன்மீதான பணியிடை நீக்க உத்தரவை நீக்குமாறு நீதிமன்றத்தில் ராதிகா மனு அளித்திருந்தார். இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், ராதிகா மனு விசாரணைக்கு வந்தது.



அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம் சுப்பிரமணியம், "அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல. அரசு ஊழியர்களின் இதுபோன்ற செயல்பாடுகளை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. ஒருவேளை ஏதேனும் அவசரமெனில் முறையான அனுமதி பெற்று செல்போனை பயன்படுத்த வேண்டும்" என கருத்து தெரிவித்து தமிழக அரசுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.


அதாவது, "அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்துவது, அலுவலக நேரத்தில் எடுக்கப்படும் வீடியோவால் வன்முறைகள் ஏற்படும் பட்சத்தில் அதுதொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தமிழக சுகாதாரத்துறைச் செயலர் இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள்ளாக இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தவேண்டும்" என நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad