ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. நாளை(டிச.,3) முதல், புதிய திட்டங்களுக்கான கட்டணம் அமலுக்கு வரும் என, வோடபோன், பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு, 6 ல் அமலுக்கு வருகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிய திட்டங்களில், 'அன்லிமிடெட்' பிரிவில், 28 நாள், 84 நாள் மற்றும் 365 நாட்களுக்கான கட்டணத்தை, 41 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன்படி, 84 நாட்களுக்கு, தினம், 1.5 ஜி.பி., டேட்டாவுடன், நேர வரம்பின்றி பேசும் திட்டத்திற்கான கட்டணம், 31 சதவீதம் உயர்ந்து, 458லிருந்து, 598 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதுபோல, தினம், 1.5 ஜி.பி., டேட்டா திட்டத்திற்கான கட்டணம், 25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 199லிருந்து, 248 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள், தொலைதொடர்பு இணைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை, 49 ரூபாயாக உயர்த்தியுள்ளன. அத்துடன், ஜியோவை பின்பற்றி, இதர தொலைதொடர்பு நிறுவன வாடிக்கையாளருடன் பேச, புதிதாக நேர வரம்பு நிர்ணயித்துள்ளன. நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மேலாக பேசினால், நிமிடத்திற்கு, 6 காசுகள் வசூலிக்கப்படும்.