ஓராண்டாக கற்பித்தல் இல்லை - ஆசிரியர்களுக்கு மேலும் சலுகை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 23, 2021

ஓராண்டாக கற்பித்தல் இல்லை - ஆசிரியர்களுக்கு மேலும் சலுகை

 



- தினமலர்

ஓராண்டாக பாடம் எடுக்காததால், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


பல பள்ளிகளில், ஆசிரியர்கள் வாரம் இரண்டு நாட்கள் வந்தால் போதும் என, அறிவுறுத்தப் பட்டு உள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவலால், ஓர் ஆண்டாக பள்ளிகள் முழுமையாக இயங்கவில்லை. ஒன்பது முதல் பிளஸ் 1 வரை ஒரு மாதமும், பிளஸ் 2வுக்கு மூன்று மாதங்களும் பள்ளிகள் செயல்பட்டுள்ளன.



இந்நிலையில், எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டு முழுதும், ஒரு நாள் கூட பாடம் நடத்தப்படவில்லை. அனைவரும், 'ஆல் பாஸ்' செய்யப்படும் நிலை உள்ளது.அவர்களுக்கு எந்த வகையிலும் கற்பித்தல் பணியை மேற்கொள்ள, தொடக்கக் கல்வி துறை முயற்சி எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.



மேலும், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்தும், அவர்கள் மாணவர்களின் கற்பித்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும், உரிய வழிகாட்டல் வழங்கப்படவில்லை. பெரும்பாலான நாட்களில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாத சம்பளம் பெறுவதற்காக, வருகைப் பதிவில் கையெழுத்திட்டு மட்டும் சென்றுள்ளனர்.



இந்நிலையில், மேலும் சலுகை வழங்கும் விதமாக, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் பள்ளிக்கு வந்து சென்றால் போதும் என, பல மாவட்டங்களில் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து, பல ஆசிரியர்கள், வாரம் இரண்டு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்து, வருகைப் பதிவில் கையெழுத்திட்டு செல்கின்றனர். பலர் சொந்தமாக தொழில் செய்ய துவங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



இதே நிலை நீடித்தால், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் எட்டாம் வகுப்பு முடிக்கும் போது, தமிழ் எழுத்துக்கள் கூட தெரியாமல் தேர்ச்சி பெறும் நிலையே ஏற்படும்.அதற்கு முன், தொடக்க கல்வி துறை விழித்துக் கொண்டு, கற்பித்தல் தொடர்பான திட்டங்களை வகுக்க வேண்டும் என, பெற்றோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.





Post Top Ad