ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத, 1,747 ஆசிரியர்களின் பட்டியலை, இன்று தாக்கல் செய்ய, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஆசிரியர் பணியில் சேர்வதற்கு, மாநில அல்லது மத்திய அரசுநடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற, 2016 நவம்பர் வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகும், பல முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பணியாற்றும், 1,747 பேர், தகுதி தேர்வை முடிக்கவில்லை என, பள்ளிக் கல்வித் துறை கண்டுபிடித்தது. அவர்களின் பெயர் பட்டியலை, இன்று தாக்கல் செய்யும்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.