பள்ளிக் குழந்தைகளுக்கு தொடர்ந்து மதிய உணவு: முதல்வருக்கு கல்வியாளர்கள் வேண்டுகோள் - Asiriyar.Net

Wednesday, January 19, 2022

பள்ளிக் குழந்தைகளுக்கு தொடர்ந்து மதிய உணவு: முதல்வருக்கு கல்வியாளர்கள் வேண்டுகோள்

 




பள்ளிக் குழந்தைகளுக்கு தொடர்ந்து மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றுதமிழக முதல்வருக்கு கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இதுதொடர்பாக தமிழ்நாடு-புதுச்சேரி பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் வே.வசந்திதேவி, செயலர் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பிஉள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள் இரண்டே மாதங்களில் மீண்டும் மூடப்பட்டுவிட்டன. மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ளன. எனவே,பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.


பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தைகள் இழப்பது கல்வியையும் கற்றல் திறனையும் மட்டுமல்ல; மதிய உணவையும்தான். பள்ளிகள் மூடப்பட்டாலும் மதிய உணவு வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஊட்டச்சத்து மிகவும் குறைபாடு உடைய நலிந்த ஒரு தலைமுறைதான் நம் கண் முன் உருவாகும்.


அங்கன்வாடிகளிலும்..


இதற்கு நாங்கள் ஒரு யோசனையை முன்வைக்கிறோம். பள்ளிகளில் சத்துணவு மையங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை குழந்தைகளை 20 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து பள்ளிக்கு வரவழைத்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உணவு வழங்க வேண்டும். இதே நடைமுறையை அங்கன்வாடிகளிலும் பின்பற்ற வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறிஉள்ளனர்.




No comments:

Post a Comment

Post Top Ad