நீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு தனி சோதனை அறை: ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 29, 2019

நீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு தனி சோதனை அறை: ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு தகவல்

நீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு சோதனை நடத்த தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஐகோர்ட் மதுரை கிளையில் தெரிவித்தார். திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தை சேர்ந்த 3,685 மாணவ, மாணவிகள் கேரளா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினர். தேர்வுக்கு கடைசி நேரத்தில் தயார் செய்ய இயலாமலும், புது இடத்தில், மொழி தெரியாத இடத்தில் தேர்வு மையத்தை தேடி அதிக மன அழுத்தத்திற்குட்பட்டார்கள். இவ்வாண்டும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டது தவிர வேறு இடங்களில், நிர்வாக வசதிக்காக தேர்வு மையம் ஒதுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வு 9,351 பணியிடங்களுக்கு நடத்தப்பட்டபோது 17 லட்சம் விண்ணப்பதாரர்கள் 6,900 தேர்வு மையங்களில் எழுதினர். எனவே தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் அமைக்க போதுமான வாய்ப்பு இருப்பது உறுதியாகிறது. அவ்வாறு இருக்கும்போது வேறு மாநிலங்களில் தேர்வு மையம் அமைப்பது தவறு. அதேபோல தேர்வு மையத்திற்கு கைக்கடிகாரம் அணிந்து செல்லக்கூடாது. ஆனால், வகுப்பறைகளில் சுவர்க்கடிகாரம் இல்லை.  நீட் தேர்வு மையங்களில் மாணவிகளை சோதனை செய்ய தனி அறை இல்லை. மாணவிகளை சுடிதார் போடுமாறு கூறுகிறார்கள்.

துப்பட்டா போட அனுமதிப்பதில்லை. இதனால் பல மாணவிகள் மிகவும் சங்கடத்திற்கு ஆளாகிறார்கள். தேர்வு மையங்களில் கேமராவிற்கு அனுமதி கிடையாது. ஆனால் அங்குள்ள நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். இதனால் மாணவிகளின் தனிப்பட்ட உரிமை பாதிக்கப்படுவதாக உள்ளது. ஆகவே, இவற்றை கருத்தில் கொண்டு, நீட் தேர்வு எழுதும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தமிழகத்திலேயே தேர்வு மையம் அமைக்கவும், அனைத்து தேர்வறைகளிலும் சுவர்க்கடிகாரம் அமைக்கவும், மாணவிகள் துப்பட்டா அணிய அனுமதிக்கவும், மாணவ, மாணவியரை பரிசோதிக்க தனி அறை வசதிகளை ஏற்படுத்தவும், தேர்வு மையங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், மாணவிகள் துப்பட்டா அணிய ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் மூடப்பட்ட சோதனை அறைகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Post Top Ad