அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்ற தீர்ப்பு தள்ளி வைப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 18, 2022

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்ற தீர்ப்பு தள்ளி வைப்பு

 




மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது.  இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில், இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.


அப்போது, ஏற்கனவே தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மீதமுள்ள 31 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதே என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.


இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்களின் குடும்பத்தினர்  தான் பயன் பெறுகின்றனர். 70 ஆண்டுகளாகியும் பின்தங்கியவர்கள்  பின்தங்கியவர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இதை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று  தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தமிழக அரசுத்தரப்பு  மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.  மொத்த இடங்களில் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை நீட் தேர்வு தகுதி அடிப்படையில் தான்  இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை என அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு  சட்டம் இயற்றப்பட்டது என்றார்.உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது நியாயமானது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது. அதன் அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றார்.அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ்,  அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளை கவனத்தில் கொள்ள தவறி விட்டது. மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றார்.


விசாரணையின் போது, பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதா என விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, அரசு பள்ளிகளின் தரத்தை  மேம்படுத்தியிருந்தால், நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தேவை இருந்திருக்காது எனக் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.




Post Top Ad