உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு அடுத்த வெள்ளோட்டாம் பரப்பு அரசு பள்ளியின்பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் பேசியதாவது:
உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் 80ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் படித்த 1.80 லட்சம் பேருக்கு வேலை இல்லை, அதே போல இந்தியாவில் 80 லட்சம் பேருக்கு வேலை இல்லை. இதனை மாற்றுகின்ற வகையில் வரும் மாதங்களில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.
அதில் ‘ஸ்கில் டிரெயினிங்’ முறையில் 12 பாடம் இணைக்கப்படும். மேலும் கல்விமுறையை பொறுத்தவரையில் கல்விக்காக தனியாக ஒரு சேனல் உருவாக்கப்படும். மேலும் நமது கல்வியில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குவதற்கு குழு ஒன்று உருவாக்கப்படும்.
வரும் 26ம் தேதி எல்.கே.ஜி, யு.கே.ஜி, வகுப்பறைகளை முதல்வர் திறந்து வைக்கிறார். அனைவருக்கும் சிறந்த கல்வியை தரும் வகையில் அரசு ஆங்கில கல்வி வகுப்பறை கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.