ஒரேயொரு நபருக்காக நாள் முழுக்க நடந்த ஆசிரியர் கலந்தாய்வு - Asiriyar.Net

Friday, July 12, 2019

ஒரேயொரு நபருக்காக நாள் முழுக்க நடந்த ஆசிரியர் கலந்தாய்வு



தமிழகம் முழுவதும் ஆசிரியர் இடமாறுதல்
கலந்தாய்வு கடந்த 8ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேலூரில் மக்களவை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பள்ளிக்கல்வித் துறை கலந்தாய்வு காலாண்டு விடுமுறையில் நடக்கும் என மாற்றப்பட்டது. தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு உள் மாவட்ட அளவில் மட்டும் கலந்தாய்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.  இதன்படி முதல் நாள் வட்டார கல்வி அலுவலர்களுக்கு உள் மாவட்ட அளவில் கலந்தாய்வு நடத்தி இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் 2ம் நாள் காலை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது. நெல்லையில்  இதற்கு 4 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இருவர் மட்டுமே இதற்கான மாறுதல் உத்தரவு பெற்றனர்.அன்று மாலையில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த இந்த கலந்தாய்வில் ஒரே ஒரு நபர் மட்டும் பதவி உயர்வு உத்தரவை பெற்றார்.
இந்நிலையில் நெல்லையில் 3ம் நாளாக நேற்று காலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அளவில் பணி நிரவல் இடங்கள் இல்லாததால் இந்த கலந்தாய்வு நடத்த வாய்ப்பில்லாமல் போனது.  பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் பணி நிரவல் கலந்தாய்வுக்கு ஒரு ஆசிரியர் மட்டும் விண்ணப்பித்து வந்திருந்தார். மாலைக்கு பின்னரே இதற்கான கலந்தாய்வு தொடங்கியது. இதனால் அவர் கலந்தாய்வு நடக்கும் மையத்திலேயே  காத்திருந்தார். ஒரு நபருக்காக நேற்று பகல் முழுவதும் கலந்தாய்வு அரங்குகளில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் காத்திருக்கும் நிலை நீடித்தது. 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது போன்ற புதிய நடைமுறை உத்தரவுகளால் ஆசிரியர்கள் மத்தியில் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆர்வம் குறைந்துள்ளது.

Post Top Ad