நீர் ஆதாரங்களை மீட்க 3003 பனை விதைகள்! - அரசுப் பள்ளிக்கு வந்து வாழ்த்திய ஆட்சியர் - Asiriyar.Net

Thursday, July 25, 2019

நீர் ஆதாரங்களை மீட்க 3003 பனை விதைகள்! - அரசுப் பள்ளிக்கு வந்து வாழ்த்திய ஆட்சியர்




சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அளவுக்கு நீர்ப்பாசனம் இல்லை என்றாலும் மழை நீரை சேகரிக்க வேண்டும் என அதிகளவு கண்மாய்கள், குளங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டுள்ளது.

 பனை விதை
இதில் சில கிராமங்களில் மட்டும் கண்மாய்கள் தூர்வாரப்படாமல் காட்சியளிக்கிறது. ஆனாலும் பல்வேறு இடங்களில் இளைஞர்களும் சமூக ஆர்வலர்களும் தாங்களாக முன்வந்து கண்மாய், குளங்கள் தூர்வாருவது, மரக்கன்றுகள் நடுவது என்று பல்வேறு சமூகப் பணிகள் செய்கின்றன

இந்த நிலையில், திருப்பத்தூர் பகுதியை அடுத்த ஆலம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இணைந்து 3003 பனை விதைகளை நட வேண்டும் என இலக்காக முடிவு செய்தனர். இதற்கு ஆலம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியரும் ஆதரவு திரட்டினார்.

பனை விதைகள்

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும், பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து பனை விதை சேகரிப்பில் ஈடுபட்டனர். சேகரித்த பனை விதைகளை நாரணமங்கலம் கண்மாய், ஆண்டியேந்தல் கண்மாய், கிராம குடிநீர் ஊரணி உள்ளிட்ட நீர் ஆதாரங்களின் கரையில் பனை விதைகளை விதைத்தனர்.

இந்த நிகழ்ச்சியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தொடங்கிவைத்தார். அப்போது பள்ளி நிகழ்ச்சியில் பேசியபோது, `` அதிக மரங்களை நட வேண்டும். பனை விதைகளை விதைக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. மரம் நடுவதற்கு அதிகளவு விழிப்புணர்வு மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் தேவை.

 ஆட்சியர் ஜெயகாந்தன்
அனைவரும் தாங்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளிலேயே படிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் திறமையானவர்கள்தான் மாற்றுச்சான்றிதழ்கள் பெற்று வேறு பள்ளிக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.

பனை விதை விதைக்கும் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாரட்டுகள் குவிந்துவருகின்றன.

Post Top Ad