திருப்பூர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளியில் விஜய் ரசிகர்கள் ஆசிரியரை நியமித்து பாடம் நடத்தி வருகின்றனர்.
புதிய ஒய்வுதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும் போன்ற 9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நேற்று முதல் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பள்ளிகள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் சின்னியகவுண்டன் புதூரில் உள்ள ஆரம்ப பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரையில் பயிலும் 94 மாணவ,மாணவிகளுக்கு விஜய் ரசிகர்கள் ஆசிரியரை நியமித்து பாடம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தால் இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத நிலையில் பூட்டப்படும் தருவாயில் இருந்த பள்ளியை அப்பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் இணைந்து இரண்டு ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரசிகர்கள் இணைந்து பணம் சேர்த்துள்ளதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் இணைந்து இதுபோன்ற ஆக்க பூர்வமான பணிகளையும் மேற்கொண்டுள்ளது மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.