வரும் 4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்கப்படாத விடுப்புக்கு ஊதியமில்லை: தலைமைச் செயலாளர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 29, 2018

வரும் 4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்கப்படாத விடுப்புக்கு ஊதியமில்லை: தலைமைச் செயலாளர்





வரும் 4-ஆம் தேதியன்று அனுமதிக்கப்படாத விடுப்புக்கு ஊதியம் வழங்க இயலாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.


ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட ஊழியர் சங்கங்கள் வரும் 4-ஆம் தேதியன்று தற்செயல் விடுப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெள்ளிக்கிழமையன்று அனைத்து துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்களுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதன் விவரம்:-
விதிகளுக்கு எதிரானது: கோரிக்கைகளை வலியுறுத்தி சில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டத்துக்கு வரும் 4-ஆம் தேதியன்று அழைப்பு விடுத்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஈடுபடுவதால் அரசு அலுவலகங்களின் வழக்கமான செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். மேலும், அது தமிழ்நாடு அரசு ஊழியர்களின் விதிகளுக்கு எதிரானது.
எனவே, வரும் 4-ஆம் தேதியன்று எந்த ஊழியராவது தற்செயல் விடுப்பு கோரியிருந்தால் அதற்குரிய காரணத்தை நன்கு ஆராய்ந்த பிறகே விடுப்பு அளிக்க வேண்டும். எனவே, விடுப்பினை அளிக்கும் அதிகாரம் பெற்ற அலுவலக உயரதிகாரிகள், தலைவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசு ஊழியர் அல்லது ஆசிரியர் வரும் 4-ஆம் தேதியன்று பணிக்கு வராமல் இருந்தால் அது அனுமதி பெறாமல் எடுக்கப்பட்ட விடுப்பாகக் கருதப்பட்டு அன்றைய தினத்துக்கான ஊதியமோ அல்லது படிகளோ அளிக்கப்படமாட்டாது. மேலும், கிராம, தாலுகா மற்றும் மாவட்ட அளவில் வரும் 4-ஆம் தேதியன்று பணிக்கு வந்த ஊழியர்களின் விவரங்கள் அடங்கிய
பட்டியலை தலைமைச் செயலகத்தில் உள்ள துறைத் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதாவது, எத்தனை பேர் அலுவலகத்துக்கு வந்துள்ளனர், எத்தனை பேர் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துள்ளனர், எத்தனை பேர் அனுமதி பெறாமல் பணிக்கு வரவில்லை, அனுமதி பெறாமல் பணிக்கு வராமல் உள்ள பணியாளர்களின் சதவீதம் எவ்வளவு ஆகிய விவரங்களை பட்டியலாகத் தொகுத்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Post Top Ad