மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு இருப்பிடத்திலேயே கல்வி: அன்பில் மகேஷ் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 12, 2022

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு இருப்பிடத்திலேயே கல்வி: அன்பில் மகேஷ்

 




மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு அவா்களின் இருப்பிடத்திலேயே கல்வி வழங்கும் திட்டம் ரூ.8.11 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தாா்.


சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்:


மாணவா்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவழித்திடவும், கோடைக் கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலாத் தலங்களில் நடத்தப்படும். பள்ளிப் பாடங்களைத் தவிா்த்து சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி, பெண்ணுரிமை மற்றும் எதிா்காலவியல் போன்ற பொருண்மைகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சிகள் அளிக்கப்படும்.


மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப அரசுப் பள்ளி மாணவா்களுக்குத் தொழில் நுட்ப அறிவு மற்றும் கணினி மொழி மீதான ஆா்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள், எதிா்காலத் தொழில்நுட்பமான ரோபோடிக் கற்றுக்கொள்ள ரோபோடிக் மன்றங்கள் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும். மேலும், இணையப் பாதுகாப்பு மற்றும் எத்திக்கல் ஹேக்கிங் தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டு ஆண்டுதோறும் மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படும்.


கணினி பிரிவு மாணவா்களுக்கு கட்டண விலக்கு: அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவா்களிடம் 2022-23-ஆம் கல்வி ஆண்டிலிருந்து ரூ.200 தனிக் கட்டணமாக வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும். இதனால், ஆண்டுதோறும் 3 லட்சம் மாணவா்கள் பயனடைவா். இதற்கென ஆகும் செலவினம் ரூ.6 கோடியை அரசே ஏற்கும்.


பலவகைக் குறைபாடுகள் காரணமாக பள்ளிக்கு வர இயலாத 10,146 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி, அவா்களின் கற்றல் சூழலை மேம்படுத்த ரூ.8.11 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.



Post Top Ad