தமிழகத்தில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இடி, மின்னல் தாக்குதலில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்து பார்க்கலாம். இடியின்போது 2 காதுகளையும் அழுத்தமாக கைகளைக் கொண்டு மூடுவதால், அதீத ஒலியால் ஏற்படும் அதிர்வை உடல் உணராமல் குறைக்கலாம்.
திடீரென ரோமங்கள் சிலிர்ப்பது, உடற்கூச்சம் ஏற்படுவது மின்னல் தாக்குவதற்கான அறிகுறியாகும். அதனை உணர்ந்த உடன், தரையில் அமர்ந்து கொள்வது சிறந்தது. தங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு தரையோடு, தரையாக குனிந்து அமர்ந்து கொள்வது மின்னலின் தாக்குதலில் இருந்து காக்கும்.
ஆனால், தரையோடு, தரையாக படுத்துக்கொள்ள கூடாது.
ஏனெனில் முதலில் மின்னல் தரையை தாக்கிய பிறகே, மனிதர்களின் உடலில் தாக்கம் ஊடுருவும். முடிந்தவரை தரையோடு நேரடி தொடர்பு குறைவாக இருக்கும் வகையில், குதிக்கால்கள் தரையில் படாமல் குனிந்து அமர்வதே மிக சிறந்த தற்காப்பு முறையாகும்.