5, 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு ஏன்? - GO: 164 அமல்படுத்த காரணம் இதுதான் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 14, 2019

5, 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு ஏன்? - GO: 164 அமல்படுத்த காரணம் இதுதான்






ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத்தேர்வு நடத்த வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு, 'ஆல் பாஸ்' செய்ய வேண்டும் என்றும், தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ பாட முறையும், தொடர் மதிப்பீட்டு தேர்வு முறையும் பின்பற்றப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரை, பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. நிபுணர் குழுஆனால், மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அளிக்காமல், அனைவரும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுகின்றனர்.இதனால், ஒன்பதாம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள், தமிழில் எழுத, படிக்கக் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும் என, நிபுணர் குழு பரிந்துரைத்தது. அதன்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில், பொதுத்தேர்வு முறையை அமல்படுத்தும்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆறு மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. அதேநேரத்தில், இதை அமல்படுத்தும் முடிவை, மாநில அரசுகளே மேற்கொள்ளலாம் என்றும் கூறியது.

கடந்த 2009ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த சட்டம் 1.4.2010 முதல் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்தது. இதற்கான விதிகள் வகுக்கப்பட்டு கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு அறிக்கை வெளியிட்டது. இதன்பேரில் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் மேற்கண்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தம் தொடர்பான அறிவிக்கை மத்திய அரசிதழில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.


அதன்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டின் முடிவிலும் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும். அந்த தேர்வில் தோல்வியுறும் குழந்தைகள் தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு மாதங்களுக்குள் மறுதேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். தொடக்க கல்வியை முடிக்கும் வரை எந்த குழந்தையும் பள்ளியில் இரு்ந்து வெளியேற்றக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.  இதை அடிப்படையாக கொண்டு, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் இதர துறைகளின் கீழ் வரும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், ஆகியவற்றில் 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் 2018-2019ம் கல்வி ஆண்டு முதல் அரசுப் பொதுத் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டி தொடக்க  கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதினார்.  

தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு பரிசீலனை செய்து அதை ஏற்று 2019-2020ம் கல்வி ஆண்டில் இருந்து 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் பொதுத் தேர்வு நடத்த தொடக்க கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.  ஏற்கனவே 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.

பெற்றோர் எதிர்ப்பு -: இதையடுத்து, சி.பி.எஸ்.இ., வாரியம், 2018 - 19ம் கல்வி ஆண்டில், பொதுத்தேர்வு நடத்தவில்லை என, அறிவித்தது. எதிர்ப்புஆனால், தமிழக பாடத் திட்ட பள்ளிகளில், பொதுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, பள்ளி கல்வி செயலர், பிரதீப் யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.கல்வி ஆண்டு முடிவதற்கு, இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பொதுத்தேர்வு நடத்துவதா என, நம் நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்று அறிவித்துள்ளது, இது மாணவர்கள் மீதான சுமையை அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து, '2018 - 19ம் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு இல்லை' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார். தற்போது, புதிய கல்வி ஆண்டு துவங்கியுள்ள நிலையில், பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசாணை, நேற்று பிறப்பிக்கப்பட்டது.


Post Top Ad