TRB - சான்றிதழ் குளறுபடியால் ஆசிரியர் நியமனத்தில் சிக்கல் - Asiriyar.Net

Thursday, August 30, 2018

TRB - சான்றிதழ் குளறுபடியால் ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்


இரண்டு சான்றிதழ் குளறுபடியால், சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் முடிவு எடுக்க முடியாமல், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், தையல், இசை, ஓவியம், உடற்பயிற்சி ஆகிய சிறப்பு பாடங்களுக்கு, 1,325 ஆசிரியர்களை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், 2017 செப்டம்பரில், போட்டி தேர்வை நடத்தியது.

இதில், 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வின் முடிவுகள், ஜூன், 14ல் வெளியிடப்பட்டன.இதையடுத்து, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், ஒரு இடத்துக்கு, இரண்டு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, ஆக., 13ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்த நடவடிக்கையில் திடீர் குளறுபடி ஏற்பட்டது.

ஒரு தரப்பினர், தமிழக பள்ளி கல்வி துறையின் அரசு தேர்வு துறை சான்றிதழையும், இன்னொரு தரப்பினர், தமிழக வேலைவாய்ப்பு துறை தனியாக நடத்திய, தொழிலாசிரியர் பயிற்சி சான்றிதழையும் காட்டினர்.இதனால், தேர்வர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே குழப்பம் ஏற்பட்டது.


இந்த பிரச்னை குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் தலைமையில், சிறப்பாசிரியர் தேர்வுக்கான தேர்வர்கள், பள்ளி கல்வி மற்றும், டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், சான்றிதழ் குறித்து, பள்ளி கல்வி துறை உரிய விளக்கம் அளிக்கவில்லை.

இதை தொடர்ந்து, தேர்வர், கவிதா உட்பட சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை, நீதிபதி, சத்ருகன் பூஜாரி விசாரித்து, டி.ஆர்.பி.,யின் சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கை, வழக்கின் முடிவுக்கு உட்பட்டது; அதுவரை முடிவு அறிவிக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு, செப்., 19க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நீதிமன்ற உத்தரவை தேர்வர்கள் சிலர், பள்ளி கல்வி துறைக்கு அனுப்பிஉள்ளனர்.இதனால், சிறப்பு ஆசிரியர் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில், பணி நியமனத்துக்கான கவுன்சிலிங் நடத்த முடியாமல், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Post Top Ad