திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு உடடினயாக விடுமுறையும் அளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 123 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. பள்ளிக் கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே தமிழக அரசு உத்தரவை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகளில் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி செயல்படுவது குறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் , சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, உடனடியாக விடுமுறை அளித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.