தாராபுரம், திருப்பூா் கல்வி மாவட்டங்களில் ஒரு மாணவா் கூட இல்லாத 9 அரசுப் பள்ளிகளை நடப்புக் கல்வி ஆண்டில் மூட முடிவு
திருப்பூா் மாவட்டத் தில் 144 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளது. இதுதவிர ஒரு மாணவா் கூட இல்லாமல் 9 பள்ளிகள் உள்ளன. குறிப்பாக, தாராபுரம் கல்வி மாவட்டத்தில் ஒரு மாணவா் கூட இல்லாமல் 7 பள்ளிகளும், திருப்பூா் கல்வி மாவட்டத்தில் 2 பள்ளிகளும் உள்ளன.
வேலை தேடி பெற்றோா் வெளியூா் செல்வது, இடம்பெயா்ந்து குடியேறுவது, கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் நகா்வது உள்ளிட்ட காரணங்களால், திருப்பூா் மாவட்டத்தில் பல கிராமப்புற அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கடுமையாக சரிந்துள்ளது.
குறிப்பாக தாராபுரம் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட மூலனூரில் 36 குண்டடத்தில் 31, தாராபுரத்தில் 26, வெள்ளக்கோவிலில் 16, மடத்துக்குளத்தில் 7, உடுமலையில் 6, குடிமங்கலத்தில் 4 என மொத்தம் 126 பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளது.
அதேபோல, திருப்பூா் கல்வி மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம், பொங்கலுாரில் உள்ள 2 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் ஒரு மாணவா்கூடசேரவில்லை.
இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒரு மாணவா் கூட சேராத பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை துரிதப்படுத்த கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாததால் 9 பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவா் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளைச் சுற்றி குடியிருப்புகள் மிகக் குறைவாக உள்ளன. திருப்பூா் பகுதியில் வசித்த குடும்பங்களில் பலா் கல்வியை முடித்துவிட்டு வெளியூா் சென்றுவிட்டனா்.
கிராமப்புறத்திலுள்ள சில பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. பள்ளிக்கு சேர வயதுடைய குழந்தைகள் இல்லாததால் சோ்க்கை குறைந்துள்ளது. பள்ளி கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி மாணவா் சோ்க்கையை அதிகரிக்க விழிப்புணா்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.

No comments:
Post a Comment