தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுத வசதியாக இந்த ஆண்டு 412 பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்னதாக, மேற்கண்ட பயிற்சி மையங்களில் சேரும் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க பாட வாரியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
இதன்படி ஒரு மையத்துக்கு 12 ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 4800 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த பாட வல்லுநர்கள் பயிற்சி அளிப்பார்கள். இந்த ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 36 வாரங்கள் இந்த பயிற்சி நடக்கும். வார நாட்களில் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.
இதற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உடன்படவில்லை. எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விடுமுறை நாட்களில் ஆசிரியர்களை பயிற்சிக்கு வரச் சொன்னால் அவர்களுக்கு எப்போது ஓய்வு கிடைக்கும்.
புதிய பாடத்திட்டத்துக்கான பயிற்சி எடுத்து வரும் நிலையில் நீட் பயிற்சி அளிக்க தனியாக ஒரு பயிற்சிக்கு செல்வது கடினம். விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணி செய்யும் நிலை ஏற்பட்டால் பள்ளிப் பாடத்தில் கவனம் செலுத்த முடியாது. அதற்காக மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதுநிலை பட்டதாரிகள் தெரிவித்து வருகின்றனர். மீண்டும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நிபந்தனை அடிப்படையில் பயிற்சியில் பங்கேற்பதாக முடிவு செய்துள்ளனர்.