கொரோனா பீதி : பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அவசியம் ஏன்? - இளம் மருத்துவரின் விளக்கம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 18, 2020

கொரோனா பீதி : பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அவசியம் ஏன்? - இளம் மருத்துவரின் விளக்கம்!





சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது இத்தாலி, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் வெகு தீவிரமாகப் பரவி வருகிறது. இத்தாலியில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிக்கின்றனர். மற்றவர்கள் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கின்றனர்.

உலகில் உள்ள 150 நாடுகளுக்கும் மிகாமல் இந்த கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் பரவி வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்தவகையில் 127 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 3 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.இதனால் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பதற்றம் நிலவுகிறது.




பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டும், பொது இடங்களில் மக்கள் கூடாத வகையில் கெடுபிடிகள் விதிக்கப்பட்டும் வருகிறது.

தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மக்கள் பொது இடங்களில் கூடாத வகையில் வணிக வளாகங்கள், திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் மட்டும்தான் கொரோனா பரவுகிறது. ஆகையால் அவர்களை மட்டும் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளலாம் என்பது போல பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அரவிந்த் ராஜ் என்ற இளம் மருத்துவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், பள்ளிக்கல்லூரிகளுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் ஏன் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பதிவிட்டுள்ளார்.

அதில், "கொரோனா வைரஸ் தொற்று உடைய நபர் ஒருவர் எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் 14 நாட்களுக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், இடைப்பட்ட நாட்களுக்குள் அந்த நபருடன் பழகியவர்களுக்கு வைரஸ் பரவக்கூடும். அதன் மூலம் பலருக்கும் நோய் பாதிப்பு ஏற்படும். மருத்துவத்தில் இது Incubation Period எனக் குறிப்பிடப்படும்.


அதைவிட, R-Naught எனும் அளவீடு ஒன்றும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது. இந்த R-Naught மதிப்பு 1க்கு கீழ் இருக்கும் பட்சத்தில் பாதிப்பு ஏற்படாது. ஆனால், 1க்கு மேல் இருந்தால் கட்டுப்படுத்தவேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதைய நிலவரப்படி இந்த R-Naught மதிப்பு 3.8 ஆக இருக்கிறது. ஆகவே, நோய்த் தொற்றுள்ள நபர் ஒருவரின் மூலம் அதிகபட்சம் நால்வருக்கு பரவும்.

அதன் காரணத்தாலேயே பள்ளி, கல்லூரிகளுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.



Post Top Ad