8,462 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் கிடைக்கவில்லை: விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 13, 2019

8,462 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் கிடைக்கவில்லை: விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை!


தமிழகத்தில் கடந்த 2011-12-ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட 8,462 ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு ஆணை வெளியிடாததால், அவர்களுக்கு இன்னும் ஏப்ரல்மாத ஊதியம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த 2011-12-ம் ஆண்டு புதிதாக ஆசிரியர் பணிநியமனத்துக்கான அறிவிப்பு வெளியானது.

அதன்படி, மேல்நிலைப் பள்ளிகளில் 1,598 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆர்எம்எஸ்ஏ மூலம் 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 8,462 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான பணிநீட்டிப்பு ஆணை அடுத்தடுத்து வெளியிடப்பட்டு, ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.இறுதியாக கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஆணையில், மார்ச் மாதம் வரை பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் பணிநீட்டிப்பு தொடர்பான ஆணை எதுவும் இதுவரைவெளியிடப்படவில்லை.


இதனால், மே மாதம் பிறந்து ஒருவாரம் கடந்தும், ஏப்ரல் மாதத்துக்கான ஊதியம் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருவூல அதிகாரிகளிடம் கேட்டால், பணிநீட்டிப்பு ஆணைவராமல் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டனர். பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை நாடினால், இதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுவிட்டது என்று மட்டும் கூறுகின்றனர். வழக்கமாக, ஒரு பணிநீட்டிப்பு காலம் முடிவதற்கு, ஒரு மாதத்துக்கு முன்னரே புதிய ஆணை வெளியிடப்பட்டுவிடும்.ஆனால், தற்போது ஒரு மாதத்துக்கு மேலாகியும்,புதிய ஆணை வரவில்லை. இதனால் பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு ஆசிரியர்கள் ஆளாகியுள்ளனர்.

கடனுக்கான தவணை செலுத்த முடியாத நிலையில், கால தாமதத்துக்கான அபராதமும் எங்கள் தலையில் கூடுதல் சுமையாக விழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து,உடனடியாக பணிநீட்டிப்பு ஆணையை வெளியிடுவதுடன், அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளமும் வழங்க வேண்டும்.

இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Post Top Ad