
எமிஸ் எண் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள், மே 17ஆம் தேதிக்குள் முழுமையாக பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும், பள்ளி மாணவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் எமிஸ் என்ற இணையதளம் மூலமாக (emis.tnschools.gov.in) பதிவேற்றும் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு எமிஸ் (EMIS No.) எண் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகைப் பதிவை டி.என்.எமிஸ் (tnemis-cell) என்ற செயலியில் பதிவேற்றம் செய்ய அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை அரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 1900-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அனைத்து பள்ளிகளிலும் எமிஸ் செயலி மூலம் மாணவர்களின் வருகைப் பதிவேடு பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் பங்கேற்ற காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் 67-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதுவரையிலும் மாணவர்களின் எமிஸ் எண் பதிவேற்றம் செய்யப்படவில்லை என குறிப்பிட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், அந்த பள்ளிகள் மே 17ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) எமிஸ் எண்ணை பதிவேற்றும் பணிகளை முடித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தகுமார், திண்டுக்கல், வேடசந்தூர், வத்தலகுண்டு மற்றும் பழனி கல்வி மாவட்ட அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.