பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் ரூ.33,000 கோடியில் ரூ.31,000 கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 16, 2021

பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் ரூ.33,000 கோடியில் ரூ.31,000 கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.அதில், ரூ.31 ஆயிரம் கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்எல்ஏ வை.முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பிறகு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியது: பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளை தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சில ஆசிரியர்கள் தவறான செயலில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.பாலியல் புகார்களுக்கு உள்ளாவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட உள்ளது.


உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆசை. இதுகுறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும். பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றார்.


பின்னர், பல பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளது, அவை எப்போது மேம்படுத்தப்படும் என்ற கேள்விக்கு, ‘‘பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அதில், ரூ.31 ஆயிரம் கோடி சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது. எஞ்சியுள்ள ரூ.2 ஆயிரம் கோடியைத்தான் 45 ஆயிரம் பள்ளிகளுக்கும் பிரித்து கட்டமைப்பு பணிகளுக்கு வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியில்தான் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்றார்.





Post Top Ad