பிளஸ் 2 படிக்காமல் பட்டப்படிப்பு, பி.எட் முடித்த ஆசிரியர் நியமனத்தை நிராகரித்த பள்ளிக்கல்வித் துறை : உயர் நீதிமன்றம் தீர்ப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 12, 2021

பிளஸ் 2 படிக்காமல் பட்டப்படிப்பு, பி.எட் முடித்த ஆசிரியர் நியமனத்தை நிராகரித்த பள்ளிக்கல்வித் துறை : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 




பட்டப் படிப்பு, பி.எட் முடித்துவிட்டு பிளஸ் 2 பாஸ் செய்தவருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம், ஒழுங்கான வரிசைப்படி கல்வி தகுதி பெறாதவர்கள் வரிசைப்படி கல்வி தகுதி பெற்றவர்களைப்போல் சம உரிமை கோர முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. கோவையை சேர்ந்தவர் ஜோசப் இருதயராஜ். இவர், கடந்த 1984ல் 10ம் வகுப்பு முடித்தார். பின்னர் 1991ல் தனது பட்டப் படிப்பை முடித்து 1993ல் பி.எட் பட்டம் பெற்று கோவை செயின்ட் மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் 2007ல் ஆசிரியராக சேர்ந்தார். அதன் பின்னர் 2010ல் பிளஸ் 2 எழுதி தேர்ச்சி பெற்றார்.


இதையடுத்து, அவரது கல்வித் தகுதி வரிசை கிரமமாக இல்லை என்று கூறி அவரது ஆசிரியர் நியமனத்தை  பள்ளிக்கல்வித் துறை நிராகரித்தது. இதை எதிர்த்து ஜோசப் இருதயராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இதேபோன்ற வழக்கில் இந்த கல்வி தகுதியாகாது என்று கூற முடியாது என்று உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது எனக்கூறி அவருக்கு பணி வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் மற்றும் கோவை மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் 2009 அரசாணையின் அடிப்படையில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றபிறகு பெறப்படும் பட்டங்களே பொது பணிகளில் நியமனம், பதவி உயர்வு பெற தகுதியானது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் அரசாணையின்படி வரிசையான முறையில் கல்வி தகுதி பெறவில்லை. இதுபோன்று பாபுதுரை என்பவர் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் நேரடியாக பட்டப்படிப்பையோ, முதுநிலை பட்டப் படிப்பையோ முடித்துவிட்டு அதன்பிறகு பிளஸ் 2 தேர்வு எழுதி தங்களை சூப்பர்மேன் என்று சிலர் காட்டுகிறார்கள். இது ஏற்கக்கூடியதல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ஒழுங்கான வரிசைப்படி கல்வி தகுதி பெறாமல் அதிக கல்வி தகுதியை பெறுபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற மிக குறைந்த உரிமைகளையே கோர முடியும். ஒழுங்கான வரிசைப்படி படித்து பட்டங்களை பெற்றவர்களைப்போல் தகுதியில் சம உரிமையை கோர முடியாது. இந்த வகையில் மனுதாரர் ஒழுங்கான வரிசைப்படி தகுதியை பெறவில்லை. எனவே, இவருக்கு பணி நியமனம் தர வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருந்தபோதும், இந்த ஆசிரியரின் பணியை பள்ளிக்கல்வித்துறை இதுவரை பயன்படுத்தியுள்ளதால் அவருக்கு தரப்பட்ட சம்பளத்தை பள்ளிக்கல்வித்துறை திரும்ப வசூலிக்க கூடாது. ஆசிரியரும் தனக்கு பண பலன்களை கோரக் கூடாது” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.





Post Top Ad