கொரோனா சமயம் மட்டுமல்ல... எப்போதும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சரியாக வைத்துக்கொள்ள 10 வழிகள்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 20, 2021

கொரோனா சமயம் மட்டுமல்ல... எப்போதும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சரியாக வைத்துக்கொள்ள 10 வழிகள்!

 







கொரோனா காலத்தில் மட்டுமல்லாமல் எக்காலத்திலும் நம்முடைய ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு சரியாக இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?


ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு பற்றிய விழிப்புணர்வு, நமக்கெல்லாம் கொரோனா காலத்தில்தான் வந்தது என்றாலும், இது அதற்கெல்லாம் முன்பே பேசப்பட்ட ஆரோக்கியத்துக்கான ஓர் அறிகுறிதான். கொரோனா காலத்தில் மட்டுமல்லாமல் எக்காலத்திலும் நம்முடைய ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு சரியாக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார் நுரையீரல் மருத்துவர் ஜெயராமன்.



சரியான ஆக்ஸிஜன் அளவு... ஏன் அவசியம்?

செடிகளுக்குப் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லையென்றால், எப்படி வாடிப்போகுமோ அதேபோல நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ரத்தத்தின் மூலமாகப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லையென்றால், அவை சோர்ந்து போகும். இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தாண்டிப்போனால், செடி பட்டுப்போவதுபோல நம்முடைய உயிருக்கும் ஆபத்து நேரலாம்.




சளி சேரக்கூடாது!

நிமோனியா, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளால் நுரையீரலில் அதிகமாகச் சளி சேரும். இதனால், நுரையீரலால் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ள முடியாமல் போகும். உங்களுக்கு மேலே சொன்ன பிரச்னைகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்வதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால், போதுமான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும்.




சுவாச அடைப்பு இருக்கிறதா?

சிலருக்கு சுவாச அடைப்பு பிரச்னை இருக்கும். இவர்கள் தூங்கும்போது மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும். இந்தப் பிரச்னை இருப்பவர்கள், இதற்கான பரிசோதனையைச் செய்து, நுரையீரலில் இருக்கிற அடைப்பை நீக்கிக்கொண்டால் போதுமான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும்.



புகை ஆக்ஸிஜனுக்கு பகை!

புகை பிடிப்பவர்களுக்கு மூச்சுக்குழலில் சுருக்கம் ஏற்பட்டு, ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்வதில் தடை ஏற்படும். உங்களுடைய ரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இருக்க வேண்டுமென்றால், புகை பிடிப்பதை கைவிட்டுத்தான் ஆக வேண்டும்.




மாசும் ஆக்ஸிஜனுக்கு பகை!

மாசு நிறைந்த காற்றைத் தொடர்ந்து சுவாசித்துக்கொண்டே இருந்தால், நுரையீரல் சீக்கிரமே பழுதடைந்துவிடும். உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும் எடுக்க முடியாமல் போய்விடும். அதனால், நீங்கள் வாழ்கிற பகுதி மாசு நிறைந்ததாக இருந்தால், டபுள் லேயர் மாஸ்க்குடன் இருங்கள்.



அதிகாலை மூச்சுப்பயிற்சி!

அதிகாலையில், அதாவது போக்குவரத்து அதிகமில்லாத நேரத்தில், தினமும் பிராணாயாமம் செய்து வாருங்கள். சுத்தமான காற்றைத் தொடர்ந்து சுவாசித்து வந்தால் நுரையீரல் வலுப்படும்.




பலூன் தெரபி

பலூன் ஊதுங்கள்!

தினமும் காலையில் 15 நிமிடம், மாலையில் 15 நிமிடம் பலூன் ஊதினால், நுரையீரலில் இருக்கிற காற்றுப்பைகள் நன்கு சுருங்கி விரியும். இதனால், நுரையீரலின் செயல்திறன் அதிகரித்து உடலுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கும்.



நடைப்பயிற்சியும் நீச்சல் பயிற்சியும்...

தினசரி நடைப்பயிற்சியும் அடிக்கடி நீச்சல் பயிற்சியும் நுரையீரலை வலுப்படுத்தி, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை கொடுக்கும்.




ரத்தசோகை

அனீமிக்காக இருக்கிறீர்களா?


ரத்தசோகை இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாகத்தான் இருக்கும். இவர்கள் இரும்புச்சத்து டானிக் அல்லது இரும்புச்சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.



குடற்புழு இருக்கிறதா?

வயிற்றில் குடற்புழு இருந்தாலும் ரத்தசோகை வரும். இவர்கள் அதற்கான மருந்தை சாப்பிட்டு புழுநீக்கம் செய்துகொண்டால், ரத்தசோகை சரியாகி, உடலுக்குப் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடும்.


Post Top Ad