பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக, இலங்கை அகதி முகாமில் வசிக்கும் மாணவி, ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து, திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் நடைபயணம் மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, பையூர் இலங்கை அகதி முகாமில் வசிப்பவர் நாகதீபன், 35. இவரது மகள் தீபலட்சுமி, 15; அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார்.மார்ச்சில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதி முகாமில் நடந்த திருமண விழாவுக்காக, நாகதீபன் குடும்பத்துடன் சென்றார்.
ஊரடங்கால் ஊர் திரும்ப முடியவில்லை. தற்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதால், தேர்வில் பங்கேற்க தீபலட்சுமி ஆர்வம் காட்டினார். திருவண்ணாமலை செல்ல, 'இ - பாஸ்' பெற முயன்றும் முடியவில்லை. இதனால், மே, 16ல் நாகதீபன் குடும்பத்தினர், மண்டபத்தில் இருந்து நடைபயணமாக புறப்பட்டனர்.
வழியில் மீன், காய்கறி வாகனங்களில் பயணித்து, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வந்தனர். பின், நடைபயணத்தை தொடர்ந்தனர்.நேற்று திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதிகாரிகள் வந்து, கொரோனா சோதனை செய்தனர். போலீசார் உணவு ஏற்பாடு செய்து, திருவண்ணாமலை சென்ற வாகனத்தில், அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்.