10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - Asiriyar.Net

Saturday, May 30, 2020

10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு



10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.


இருப்பினும், வரும் ஜூன் 1ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் எனக் கூறி பள்ளிக்கல்வித்துறை அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது. ஆனால், முதலமைச்சருடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, ஊரடங்கு முடிந்த மறுநாளே தேர்வு நடத்துவது சற்று அரிதான காரியம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதனால், ஜுன் 15-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரித கதியில் நடைபெற்று வருகிறது. சமூக இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத தேர்வு மையங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதியில் அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 


அதோடு, பள்ளிகள் திறப்பதற்கான சூழல் தற்போது இல்லை எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு முடிவு செய்யும் எனவும், பள்ளி வேலை நாட்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என தெரிவித்தார்.

12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மே 27-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad