சென்னையில் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை நேரில் பார்வையிட அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு சேர்க்கை சான்றுகளை வழங்கினார். அதற்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாணவர் சேர்க்கை 27 மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.
மீதம் உள்ள 11 மாவட்டங்களில் இப்போதைக்கு தொடங்கவில்லை. தற்போதைய கொரோனா தொற்று காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி என்று போட்டுள்ளோம். 9ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டுதான் பிளஸ் 1 ல் அவர்கள் என்ன பாடப்பிரிவு எடுக்கிறார்கள். மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் விரைவில் தொடங்கும்.
நிறைய இடங்களில் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாணவர்கள் இடம் பெயர்ந்து வருகின்ற நிலை உள்ளது. பள்ளிகளில் ஆய்வுக்கூட பொருட்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் வரும் பட்சத்தில் அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்து யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ் 1 வகுப்பு தவிர மற்ற 1, 6, 9ம் வகுப்புகளுக்கும் சேர்க்கை நடந்துவருகிறது. ஒருவாரத்தில் அது முடிந்த பிறகு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். கல்விக் கட்டணத்தை பொருத்தவரையில் இரண்டு தவணையாக வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே தவணையாக கேட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதுள்ள கொரோனா தொற்று பரவல் முற்றிலும் குறைந்து மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத நிலையில் தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படுவதற்கான எண்ணம் அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment