School Morning Prayer Activities - 28.11.2018 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 28, 2018

School Morning Prayer Activities - 28.11.2018



பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:



திருக்குறள் : 92

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

உரை:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.


பழமொழி:

Do not rub peter to pay paul

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே

பொன்மொழி:

அணு அளவு கூட பிறரை ஏமாற்றுவது இல்லை என்னும் பூரண நிலை அடைந்து விட்டால் அவனே கடவுள்.

- பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது?
ஃப்ரெஞ்ச்

2.கன்வாரிஸ் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
சிவ பக்தர்கள்

நீதிக்கதை :



பொய்!


தேவர்கள் உண்ணும் அமிர்தத்தை உண்டால் சாக வேண்டியதில்லை...' என்ற உண்மையை அறிந்த ஒருவன், நீண்ட தவம் செய்தான்.
''உனக்கு என்ன வரம் வேண்டும்...'' என்றார் கடவுள்.
''ஒரு குடம் நிறைய அமிர்தம் வேண்டும்...''
''சரி தருகிறேன்... அதை, தரையில் வைத்தால் பலன் கிடைக்காது...''
வெள்ளி குடம் நிறைய, அமிர்தத்தை கொடுத்த கடவுள், மறைந்து விட்டார்.
மகிழ்ச்சியில், 'அமிர்தம் வாங்கிய பெருமையை, பலர் அறிய கூறி, எவருக்கும் கொடுக்காமல், தான் மட்டும் குடிக்க வேண்டும்' என நினைத்து, அமிர்த கலசத்தை தலையில் சுமந்தபடி நடந்தான்.

குறுக்கே சிற்றாறு வந்தது.
ஆற்றை கண்டதும், வயிறு தொல்லை செய்தது; சற்று மறைவாக ஒதுங்க நினைத்தான்.

அப்போது, ஆற்றின் பக்கம் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
அவனிடம், அமிர்த குடத்தை கொடுத்து, சிறிது நேரம் தலையில் வைத்திருக்கும்படி வேண்டினான். ஆனால், குடத்தில் உள்ள அமிர்தம் பற்றி சொல்லவில்லை.
''சரி வைத்திருக்கிறேன்...'' என்றான், புதியவன்.

அதை திறந்து குடித்து விடுவானோ என்ற சந்தேகத்தில், ''அப்பனே... குடத்தில் விஷம் உள்ளது; அதாவது, ஆலகால விஷம். இதை மருந்துக்காக எடுத்துப் போகிறேன்; தரையில் வைத்தால், சக்தி போய் விடும்; எனவே, தலையிலேயே வைத்திரு...'' என கூறி, தொலைவில் நின்ற பனைமரங்களை நோக்கி நடந்தான்.

தலையில் ஆலகால விஷத்தை சுமந்து நின்றவனுக்கு, மூளை வேலை செய்தது.
அவனோ, 30 ஆண்டுகள் வயிற்று நோயால் அவதிப்படுகிறான். ஆற்றில் விழுந்து, இறந்து போக வந்திருந்தான். அப்படி வந்தவனுக்கு யோகம் அடித்தது.
அதாவது, ஒரு குடம் நிறைய ஆலகால விஷம் கிடைத்திருக்கிறது. சும்மா இருப்பானா...

குடத்தை திறந்து, ஒரு சொட்டு விடாமல், 'மட... மட...' என, குடித்து முடித்து ஆற்றிலே விழுந்தான்.
திரும்பி வந்தவன், குடம் தரையில் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டான். அதை சுமந்து நின்றவன், தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தான்.
''சுவாமி... நான் தீராத வயிற்று வலிக்காரன்; தாங்கள் கொடுத்த விஷம் அடியேன் வயிற்று வலியை நீக்கி விட்டது. நான், இறக்க நினைத்து, ஆற்றில் விழ வந்தேன். விஷம் கிடைத்ததால், அதைக் குடித்து செத்து போக நினைத்தேன்; ஆனால், நீங்கள் கொடுத்த விஷம் என் நோயிலிருந்து என்னை காப்பாற்றி விட்டது... நன்றி!'' வந்தவன் அதிர்ந்து நின்றான்.
குட்டீஸ்... உண்மையை திரித்து, சொன்னால், நமக்கு எதிராக மாறும் என, புரிந்து கொண்டீர்களா...

இன்றைய செய்தி துளிகள் :

1.கஜா புயல் சேதம் குறித்த ஆய்வறிக்கையை 2 நாட்களில் மத்திய குழு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

2.நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: புயல் பாதித்த பகுதி மாணவர்கள் கோரிக்கை

3.கஜா புயல் நிவாரணத்துக்கு உண்டியலில் சேர்த்த பணத்தை தானமாக வழங்கிய மாணவன் : கலெக்டர் பாராட்டு

4.13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று அர்ஜென்டினா பயணம்

5.உலகக் கோப்பை ஹாக்கிப்போட்டி: கலை நிகழ்ச்சியுடன் ஒடிசாவில் தொடங்கியது.

Post Top Ad